கூடங்குளம் எதிர்ப்பு போராட்டத்தில் வெளிநாட்டினர் சதி? அணுமின் கழக தலைவர் ஜெயின் தகவல்
"அமெரிக்கா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட வெளிநாட்டு சக்திகளின் துணையுடன், கூடங்குளம் அணு உலைக்கு பிரிவினை சக்திகள் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்,'' என, இந்திய அணுமின் கழகத் தலைவர் டாக்டர் ஜெயின் தெரிவித்துள்ளார்.
கூடங்குளம் அணு உலை தொடர்பாக, இந்திய அணுமின் கழகத் தலைவர் டாக்டர் ஜெயின், நிருபர்களுக்கு அளித்த பேட்டி:கூடங்குளம் அணு உலையில், டிசம்பர் மாதம் மின் உற்பத்தியை துவக்கியிருக்கலாம். ஆனால், பிரிவினை சக்தி போராட்டங்களால், மின் நிலையத்திற்குள் செல்லவே முடியாத அளவுக்கு தடைகள் ஏற்படுத்தப்பட்டன. ஆனாலும், அடிப்படைத் தேவைகளை சிரமப்பட்டு பராமரிக்கிறோம்.அணு உலையில், "ஹாட் ரன்' எனப்படும் தொழில்நுட்பப் பணி முடிந்ததால், அங்கு குளிரூட்டும் பணி தொடர்ந்து நடக்க வேண்டும். இதற்கு தண்ணீர் சுழற்சி, மின்சாரம் மற்றும் அடிப்படை பராமரிப்பு பணிகள் தேவை. இல்லையென்றால், குளிரூட்டும் இயந்திரத்தில் தண்ணீர் தேங்கி பெரும் பாதிப்பு ஏற்படும்.
வெளிநாட்டு சக்தி
கூடங்குளம் அணு உலைக்கு எதிரான போராட்டத்திற்கு, வெளிநாடுகளிலிருந்து தாராளமான நிதியுதவி கிடைக்கிறது. அமெரிக்கா, பிரான்ஸ், பின்லாந்து மற்றும் ஆஸ்திரேலியா நாட்டைச் சேர்ந்த சுற்றுச்சூழல் அமைப்பினரின் பின்னணியில், இந்த போராட்டம் நடக்கிறது. கூடங்குளம் பகுதியைச் சுற்றி அவர்களின் ஆதரவாளர்கள் முகாமிட்டுள்ளனர். இதில், தமிழகத்தில் வசிக்கும் பிரிவினை சக்திகள் உதயகுமார் என்பவரின் தலைமையில், அணு உலைக்கு எதிரான போராட்டம் நடத்துகின்றனர். துரதிர்ஷ்டவசமாக சில கிறிஸ்தவ தேவாலயங்கள் மற்றும் அதை சேர்ந்தவர்களும் இதில் பங்கெடுத்துள்ளனர்.
நினைத்தவுடன் மூட கார் தொழிற்சாலையல்ல...
கூடங்குளம் அணு உலை பணிகள் 99 சதவீதம் முடிந்துள்ளன. மத்திய அணுசக்தி கமிஷன் மற்றும் ஒழுங்கு முறை கமிஷனின் வழிகாட்டுதல்படி, கூடங்குளத்தில், பாதுகாப்பு ஒத்திகை நடத்தப்பட்டது. இது, பாதுகாப்பு ஏற்பாடுகளை சரிபார்க்க நடத்தப்பட்ட ஒத்திகை. ஆனால், பிரிவினை சக்திகள் இதை பயன்படுத்தி, அங்குள்ள கிராமங்களில், "மக்களை இங்கிருந்து காலி செய்து விடுவர்' எனக் கூறி, பீதியை ஏற்படுத்திவிட்டனர். இந்த உண்மைக்கு மாறான வதந்தியால் பீதியடைந்த மக்களை பயன்படுத்தி, போராட்டம் நடத்துகின்றனர். கூடங்குளத்தைச் சுற்றி 27 கிராமங்கள் உள்ளன. இதில், 22 கிராமத்தினர் எதிர்ப்பு போராட்டத்தில் பங்கெடுக்காமல், திட்டத்திற்கு ஆதரவாகவே உள்ளனர்.அணு உலையை பொறுத்தவரை, எப்போது வேண்டுமானாலும் நிறுவவும், மூடவும் கார் தொழிற்சாலை கிடையாது. இதற்கென பல தொழில்நுட்பப் பணிகள் உள்ளன. ஒரு இடத்தில் அணு உலை நிறுவப்பட்டால், அதை பராமரிக்க மட்டுமே முடியும். மாறாக, நினைத்த நேரத்தில் மூட முடியாது. அவ்வாறு மூடினால், பின்விளைவுகளை ஏற்படுத்தும். எனவே, தற்போதைய நிலையில், அணு உலையை மூடுவதற்கு சாத்தியமே இல்லை.இவ்வாறு ஜெயின் கூறினார்.
மத்திய நிபுணர் குழுவுடன் அணு விஞ்ஞானிகள் ஆலோசனை *அடுக்கடுக்காக கேள்வி கேட்ட உறுப்பினர்கள்
கூடங்குளம் விவகாரத்தில், மத்திய அரசு அமைத்த நிபுணர் குழுவின் முதல் ஆலோசனைக் கூட்டம், சென்னையில் நடந்தது. இதில், இந்திய அணுமின் கழக தலைவர் ஜெயின், அணுசக்தி இயக்குனரக செயலர் உள்ளிட்ட விஞ்ஞானிகள் பங்கேற்று, நிபுணர் குழுவின் சந்தேகங்களுக்கு விளக்கம் அளித்தனர்.
கூடங்குளம் அணுமின் நிலையம் தொடர்பாக பொதுமக்களின் அச்சத்தை போக்க, இந்தியாவில் பல்வேறு துறைகளில் சிறந்த 15 நிபுணர்கள் கொண்ட குழுவை, மத்திய அரசு அமைத்துள்ளது. இதில், தமிழகத்திலிருந்து, கடலியல் மற்றும் விண்வெளித் துறை விஞ்ஞானி முத்துநாயகம், புற்றுநோய் மருத்துவர் சாந்தா, வாழ்வியல் அறிவியல் துறை பேராசிரியர் சுகுமாறன் உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர்.இக்குழுவினரின் முதல் அறிமுக மற்றும் ஆலோசனைக் கூட்டம், சென்னையில் நேற்று நடந்தது. நிபுணர் குழுவினர் அனைவரும் தனித்தனியாக அறிமுகம் செய்யப்பட்டனர்.இந்திய அணுசக்தி கமிஷன் தலைவர் மற்றும் அணுசக்தி இயக்குனரக செயலர் ஸ்ரீகுமார் பானர்ஜி, மும்பையிலுள்ள இந்திய அணுமின் கழக தலைவர் மற்றும் மேலாண் இயக்குனர் டாக்டர் எஸ்.கே.ஜெயின், அணுசக்தி தொழில்நுட்ப இயக்குனர் பரத்வாஜ் ஆகியோர் கூட்டத்தில் பங்கேற்று, கூடங்குளம் அணு உலை குறித்து, நிபுணர் குழுவுக்கு விளக்கம் அளித்தனர்.
அணுமின் விஞ்ஞானிகளிடம் நிபுணர் குழுவினர், பொதுமக்களின் அச்சம் குறித்து, அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பினர். கூடங்குளம் அணுமின் நிலைய எதிர்ப்பாளர்கள், தங்களது அச்சம் குறித்து, பிரதமர் மன்மோகன் சிங்கிடம் அளித்த மனுக்களின் பிரதிகள், ஒவ்வொரு நிபுணர்களுக்கும் வழங்கப்பட்டன.அந்த மனுக்களில் கூறப்பட்ட அச்சம் தொடர்பான பதில்களையும், அவை தொடர்பான ஆய்வு புத்தகங்கள், உலக அளவில் வெளியான குறிப்புகள் ஆகியவற்றின் நகல்களையும், அணுமின் கழக அதிகாரிகள், நிபுணர் குழுவினருக்கு வழங்கினர்.
இதுதொடர்பாக நிபுணர் குழுவினர், தாங்கள் நிபுணத்துவம் பெற்ற துறைகள் தொடர்பான காரணங்களுக்கு ஆய்வு செய்து, குறிப்புகள் தயார் செய்வதாக தெரிவித்துள்ளனர். தமிழக அரசிடம் பேசி, விரைவில் மாநில கமிட்டி அமைக்கப்படும் என்றும், இந்த கமிட்டியினரும் மத்திய நிபுணர் குழுவினருடன் இணைந்து செயல்படுவர் என, அணுமின் அதிகாரிகள் உறுதியளித்துள்ளனர். மீண்டும் அடுத்த வாரம் கூட்டம் நடைபெறும்.
முதல்வரை சந்திக்க முடியாத விஞ்ஞானிகள்:
கூடங்குளம் பிரச்னை தொடர்பாக, மத்திய அரசு அமைத்த நிபுணர் குழு பிரதிநிதிகளுடன், தமிழக முதல்வர் ஜெயலலிதாவை சந்திக்க, அணுமின் விஞ்ஞானிகள் திட்டமிட்டிருந்தனர்.இதுகுறித்து, தமிழக அரசு அதிகாரிகளை தொடர்பு கொண்டு, சந்திக்க நேரம் கேட்டிருந்தனர். ஆனால் முதல்வர் அலுவலகத்திலிருந்து பதில் கிடைக்காததால், விஞ்ஞானிகள் காத்திருந்து விட்டு, மும்பைக்கு திரும்பி விட்டனர்.
கூடங்குளம் அணுமின் நிலையத்தை மூடுவது ஆபத்தை ஏற்படுத்தும் =இந்திய அணுசக்தி கழக தலைவர் ஸ்ரீகுமார் பானர்ஜி எச்சரிக்கை
""கூடங்குளம் அணுமின் நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள முதல் அணு உலையில் யுரேனியம் நிரப்பப்பட்டு, மின் உற்பத்திக்கான ஒத்திகை நடந்து வருகிறது. இந்த நேரத்தில், அணுமின் நிலையத்தை மூடினால், அது பேராபத்தை ஏற்படுத்தும். எனவே, பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டுவிட்டு, அணுமின் நிலையம் செயல்பட ஒத்துழைப்பு தர வேண்டும்,'' என்று இந்திய அணுசக்தி கழக தலைவர் ஸ்ரீகுமார் பானர்ஜி கூறியுள்ளார்.
சென்னையில் நேற்று நடந்த ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக இந்திய அணுசக்தி கழக தலைவர் ஸ்ரீகுமார் பானர்ஜி, மும்பையில் இருந்து நேற்று காலை 9.30 மணிக்கு வந்தார்.
சென்னை விமான நிலையத்தில் அவர் அளித்த பேட்டி:கூடங்குளம் அணுமின் நிலையத்தில் மின் உற்பத்திக்கான அனைத்து பணிகளும் நிறைவடைந்துவிட்டன. முதல் அணு உலையில், யுரேனியம் நிரப்பப்பட்டுவிட்டது. உயர் மின்அழுத்த இணைப்புக்களும் கொடுக்கப்பட்டுவிட்டன. தற்போது, அணு உலை இயக்கப்பட்டு, மின் உற்பத்திக்கான சோதனை ஓட்டம் நடந்து வருகிறது. இந்நிலையில், அணு மின் நிலையத்தை மூடுவது பேராபத்தை விளைவிக்கும். தற்போதுள்ள சூழ்நிலையில், அணுமின் நிலையத்தை மூடுவதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை. கூடங்குளம் அணு மின் நிலையத்தில் அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளும் சிறப்பாக உள்ளன. இந்நிலையில், பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபடுவது சரியல்ல. கூடங்குளம் அணுமின் நிலையத்தால் ஆபத்து என்பது வதந்தி. எனவே, கூடங்குளம் அணுமின் நிலையம் செயல்பட அப்பகுதி மக்கள் ஒத்துழைப்பு தர முன்வர வேண்டும்,இவ்வாறு ஸ்ரீகுமார் பானர்ஜி கூறினார்.
அசம்பாவிதம் தடுக்க தமிழக போலீஸ் பாதுகாப்பு தேவை:
கூடங்குளம் அணு உலையை நிறுத்த முடியாத அளவுக்கு, 99 சதவீத தொழில்நுட்ப பணிகள் முடிந்து விட்டன. ரியாக்டரை சுற்றி, குளிரூட்டு பணி நடக்கிறது. இதற்கு சீரான மின்சாரம், தொழில்நுட்ப கட்டுப்பாட்டு பணிகள், சுழற்சிமுறை நீர் வினியோகம் உள்ளிட்ட பராமரிப்பு பணிகள் தேவை. ஆனால், இதை மேற்கொள்ள அணுமின் அதிகாரிகள், அணு உலை வளாகத்துக்குள் செல்ல முடியவில்லை.அவர்களது வாகனங்களை, அணு எதிர்ப்பாளர்கள் மறித்தனர். இதனால், கடந்த ஒரு வாரமாக விஞ்ஞானிகள், அணு உலை பகுதிக்குச் செல்லவில்லை. யுரேனிய எரிபொருள் இருப்பு வைக்கப்பட்ட நிலையத்திற்கு, அசம்பாவிதம் ஏற்பட்டுவிடக் கூடாது என்பதால், அங்கு மத்திய படை குவிக்கப்பட்டுள்ளது. கடற்படையினரும் கண்காணிக்கின்றனர்.மாநில போலீசாரோ, நிர்வாகமோ இதை கண்டுகொள்ளவில்லை. உலைக்கு பாதிப்பு ஏற்பட்டால், மாநில அரசுக்கும் சுற்றியுள்ள மக்களுக்கும் தான் பெரும் பாதிப்பு ஏற்படும். இதன் பின்விளைவுகளுக்கு, மாநில அரசு தான் முதல்கட்ட பொறுப்பு ஏற்கும் நிலை வரும்.எனவே, மக்கள் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, இப்பிரச்னையில் மாநில அரசு தலையிட்டு, உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும். பாதையை மறிக்கும் எதிர்ப்பாளர்களை, பாதுகாப்பு கருதி இடம் மாற்றம் செய்ய வேண்டும் என்பதே, நடுநிலையாளர்களின் எதிர்பார்ப்பு.